மேலும்

காங்கேசன்துறையில் அனைத்துலக உறவுகளுக்கான நிலையம் – கட்டுமானப்பணிகளை தொடர அனுமதி

kks-palaceகாங்கேசன்துறையில் கட்டப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய அதிபர் மாளிகையின் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள, சிறிலங்கா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டு வந்த கட்ட்டத் தொகுதியைப் பார்வையிட்டிருந்தார்.

இது முன்னைய ஆட்சியாளரால் சிறிலங்கா அதிபருக்காக அமைக்கப்பட்ட சொகுசு மாளிகை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அது அதிபர் மாளிகை அல்ல என்றும், அனைத்துலக மாநாட்டு மண்டபமே என்றும், அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்,  வடக்கு மாகாண அனைத்துலக உறவுகளுக்கான நிலையத்தின் கட்டட வளாக நிர்மாணப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்கும், அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை, நேற்றுமுன்தினம் சமர்ப்பித்துள்ளார் சிறிலங்கா அதிபர்.

இதுகுறித்து தகவல் வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன,  2014ம் ஆண்டு ஜனவரி மாதம் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, காங்கேசன்துறையில் அனைத்துலக உறவுகளுக்கான நிலைய வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

நீர், மின்சாரம், தொலைபேசி, இணையத் தொடர்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் கூடியதாக, 113,000 சதுரு அடி பரப்பளவில் இந்த நிலையம் கட்டப்படுகிறது.

மேலதிகமாக உள்ளக வீதி, பூந்தோட்டம், இரண்டு நீச்சல் தடாகங்கள், மின்பிறப்பாக்கிகள், நீர் சுத்திகரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தற்போது 70 வீதமான கட்டுமான வேலைகள் முடிவடைந்துள்ளன. இந்த வளாகத்தை அமைக்க 1587.8 மில்லியன் ரூபா தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டது. தற்போது, 966.3 மில்லியன் ரூபாவுக்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது, இந்த நிலையத்தை அமைப்பதற்காக திட்டமிட்ட செலவுத் தொகைக்குள் பணிகளை முடித்து பொதுத்தேவைக்காக அனுமதிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *