சிறிலங்காவில் நிகழ்ந்த மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா- சூசகமாக தெரிவித்த ஜோன் கெரி
சிறிலங்காவில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு முன்பாக உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
வோசிங்டனில் நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவில், 2016ம் நிதி ஆண்டுக்கான, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக உரையாற்றினார்.
“பிரச்சினைகளுக்குரிய உலகில் அமெரிக்க நலன்களை முன்னெடுத்தல் – 1016 நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்“ என்ற தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி,
“இதுவரை ஜனநாயகம் இல்லாத, பிரச்சினைக்குரிய பல இடங்களில், ஜனநாயகத்தை இப்போது காண முடிகிறது.
சிறிலங்காவிலும், ஏனைய நாடுகளிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தப் பட்டியலைத் தொடரமுடியும்.
மாற்றங்களை ஏற்படுத்தும் மகத்தான வாய்ப்புகளுக்காக நாம் எமது பணிகளை ஆற்ற வேண்டும்.
இதனைத் தொடர்ந்து உறுதியாக முன்னெடுப்பதற்கு, மாற்றங்களை ஏற்படுத்துவதற்குத் தேவையான வளங்கள், ஒதுக்கப்பட வேண்டும்.”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க இராஜாங்கச் செயலரின் இந்தக் கருத்து, சிறிலங்காவின் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா இருந்திருப்பதான கருத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.