சிறிலங்கா பாதுகாப்புச்செயலருடன் இந்திய துணைத் தூதர் சந்திப்பு
வடக்கு கடற்பரப்பில் அண்மைய நாட்களாக தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்கவை, இந்தியத் துணைத் தூதுவர் அரிந்தம் பக்சி இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, அதேவேளை, கடந்த சில நாட்களாக வடக்கு கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதாகவும், இதனால் தமது வலைகள் சேதமடைந்து மில்லியன் கணக்கான ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறைக் கரையில் இருந்து மூன்று கி.மீ தூரம் வரை சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதாகவும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சிறிலங்கா கடற்படையினரை அவர்களைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
ஆட்சிமாற்றத்தையடுத்து, ஏற்பட்டுள்ள சாதகமான நிலையை பயன்படுத்தி, தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறுவதாக யாழ். மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தவாரம் இந்தியா செல்லவுள்ளதால், அத்துமீறும் தமிழ்நாட்டு மீனவர்களைத் தடுப்பதில் சிறிலங்கா கடற்படை அசமந்தமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.