மேலும்

பதவியேற்றார் சிறீபவன் – பிரதம நீதியரசரான மூன்றாவது தமிழர்

Justice-K.-Sripavanசிறிலங்கா உயர்நீதிமன்றத்தின் 44வது பிரதம நீதியரசராக கனகசபாபதி சிறீபவன் இன்று மாலை , சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார்.

43வது பிரதம நீதியரசராக நேற்று முன்தினம் மீண்டும் பொறுப்பேற்ற சிராணி பண்டாரநாயக்க நேற்று தனது பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.

இதையடுத்து, புதிய பிரதம நீதியரசராக சிறீபவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்காவின்  வரலாற்றில் பிரதம நீதியரசராகப் பொறுப்பேற்கும் மூன்றாவது தமிழர் இவராவார்.

ஏற்கனவே, 1984ம் ஆண்டு தொடக்கம், 1988ம் ஆண்டு வரை சுப்பையா சர்வானந்தா 37வது பிரதம நீதியரசராகவும்,  1991ம் ஆண்டில் ஹேர்பேர்ட் தம்பையா 39வது பிரதம நீதியரசராக குறுகிய காலமும் பதவி வகித்திருந்தனர்.

கனகசபாபதி சிறீபவன் 1952 ம் ஆண்டு பெப்ரவரி 29 ம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.

யாழ். இந்து கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்ற அவர், 1976ம் ஆண்டு சட்டக் கல்லூரியில் முதல் தரத்தில் சித்தியடைந்தார்.

justice-siripavan

1978ம் ஆண்டு பெப்ரவரி 14ம் நாள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிக்கு சேர்ந்த சிறீபவன், பதில் சட்ட ஆலோசகராக பணியாற்றினார்.

1989 ம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் மூத்த சட்ட ஆலோசகராக  இவர் நியமிக்கப்பட்டார்.

1996ம் ஆண்டு பிரதி சட்டமா அதிபராக நியமனம் பெற்ற சிறீபவன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராகவும் பணியாற்றினார்.

இவர், 1992 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழிற்சட்டம் சம்பந்தமான டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.

அத்துடன் அதே ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான சிறப்புப் பட்டத்தையும் பெற்றார்.

2002 ஆம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

2007ம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக சிறீபவன் நியமிக்கப்பட்டார்.

உயர் நீதிமன்ற நீதியரசர் நிஹால் ஜயசிங்க ஓய்வுபெற்ற பின்னர் இவர் 2008 ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டிருந்தார்.

சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேனவுக்கு சத்தியப் பிரமாணம் செய்து வைத்து நீதியரசர் சிறீபவன், இன்று அவர் முன்பாகவே, பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *