மேலும்

ஜெனிவாவை எதிர்கொள்ளும் திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கிறார் ரணில்

RANILஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை நடத்திய விசாரணையின் அறிக்கை வரும் மார்ச் மாதம் நடக்கவள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனை எதிர்கொள்வது குறித்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக, பிரதமர் செயலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூன்று வகையான உள்ளீடுகளின் அடிப்படையில், ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்.

அடுத்து வரும் நாட்களில் அரச அதிகாரிகளுடன் தீவிரமான கூட்டங்களை நடத்தவுள்ள ரணில் விக்கிரமசிங்க, அவர்களின் பரிந்துரைகளையும், தனது அறிக்கையில் உள்ளடக்குவது குறித்து கவனத்தில் கொள்ளுவார்.

தற்போது பிரசெல்ஸ் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் நடத்தவுள்ள பேச்சுக்களைக் கருத்தில் கொண்டு, அவர் அளிக்கும் பரிந்துரைகளையும் ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் உள்ளடக்குவார்.

தனது அறிக்கையை இறுதி செய்வதற்கு முன்னதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க, அவரது பரிந்துரைகள் மற்றும் திருத்தங்களையும் தனது அறிக்கையில் சேர்த்துக் கொள்ளவிருக்கிறார்.

இதையடுத்தே அமைச்சரவையின் அனுமதிக்காக ரணில் விக்கிரமசிங்க அந்த அறிக்கையை சமர்ப்பிப்பார் என்றும் அவரது செயலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *