இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா – சிறிலங்கா பேச்சு
முன்னைய ஆட்சிக்காலத்தில் சீர்குலைந்திருந்த அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை, மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து, கொழும்பில் நேற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிறிலங்கா பிரதமரின் செயலகத்தில் இடம்பெற்ற இந்தப் பேச்சுக்களில், அமெரிக்கத் தூதரகத்தின் பதில் தூதுவரும், இராஜதந்திர விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியுமான, அன்ட்ரூ மான், சிறிலங்காவின் கொள்கை நடைமுறைப்படுத்தல், பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தப் பேச்சுக்களின் போது இருதரப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
சிறிலங்காவில் அமெரிக்காவின் முதலீட்டை அதிகரிப்பது மற்றும் அமெரிக்காவிடம் இருந்து தொழில்நுட்ப உதவிகளை பெறுவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையான அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளை அதிகரிப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக பொருளாதார விவகார அதிகாரி கிறிஸ்தோபர் கோர்கியும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றிருந்தார்.