காலியில் மேலும் மூன்று ஆயுதக் களஞ்சியங்கள் – மேஜர் சேனாதிபதி நாட்டை விட்டு வெளியேத் தடை
காலி துறைமுகத்தில் ஆயுதக் கப்பல் ஒன்று தரித்து நின்றது தொடர்பாக, அந்தக் கப்பலுக்குச் சொந்தமான தனியார் பாதுகாப்புச் சேவை நிறுவனத்தின் தலைவரான மேஜர் நிசங்க சேனாதிபதி நாட்டை விட்டு வெளியேத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அவன்ற் கார்டே கடல் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவரான, மேஜர் நிசங்க சேனாதிபதி, காலித் துறைமுகத்தில் பிடிபட்ட ஆயுதக் கப்பல் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை வெளிநாடு செல்வதற்கு, கொழும்பு பிரதம நீதிவான் நேற்று தடைவிதித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்றே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே, காலியில் மேலும் மூன்று இடங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்பாகவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களை அடுத்து, காலி துறைமுகப் பகுதியில் மேலும் மூன்று ஆயுதக் களஞ்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை மற்றொரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினால் பயன்படுத்தப்பட்டவையாகும்.
இவை குறித்து நீதிமன்ற ஆணையுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.