13வது திருத்தத்தின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு – நாடாளுமன்றத்தில் ரணில்
புதிய அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வு ஒன்றை நடைமுறைப்படுத்தும் என்று சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று, உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னைய ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டு, நிறைவேற்று அதிகாரத்தால் கட்டுப்படுத்தப்பட்ட நாடாளுமன்றத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
அத்துடன், சுதந்திர ஆணைக்குழுக்கள் மீண்டும் உருவாக்கப்பட்டு, மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் புத்தரின் வழியில் ஆட்சியை நடத்தும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, விமல் வீரவன்சவே அழித்து விட்டதாக குற்றம்சாட்டிய ரணில், வெறுப்புணர்வைத் தூண்டும் இனவாதத்தைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் விமல் வீரவன்சவிடம் கோரிக்கை விடுத்தார்.