வடக்கிற்கான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம்
வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் சிறிலங்காவின் வடக்குப் பகுதிக்குப் பயணம் செய்வதற்கு, பாதுகாப்பு அமைச்சினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் நீக்கியிருக்கிறது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை நடந்த முதலாவது பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையப் பணிப்பானர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் அமைதியான சூழல் நிலவுவதால், இந்த கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெடிபொருட்கள், ஆயுதங்கள், ஆயுதப்படையினரின் சீருடையை ஒத்த துணிகள், தொலைநோக்கிகள் தவிர்ந்த, ஏனைய பொருட்களை வடக்கு, கிழக்கிற்கு கொண்டு செல்வதற்கு இருந்து வந்த கட்டுப்பாட்டை நீக்குவதற்கும் நேற்று நடந்த பாதுகாப்பச்சபைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.