நோர்வே ‘தமிழ்3’ வானொலி நடாத்தும் நாடக எழுத்துருப் போட்டி
நோர்வே தமிழ்3 வானொலியின் 2வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, வானொலி நாடக எழுத்துருவிற்குரிய போட்டி ஒன்றினை நடாத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பிரதேசங்கள் மற்றும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலிருந்தும் ஆர்வமுள்ள நாடக எழுத்தாளுமைகளிடமிருந்து நாடக எழுத்துருக்கள் போட்டிக்கு கோரப்படுகின்றன.
போட்டிக்கான விதிமுறைகளாக பின்வரும் அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:
போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும் எழுத்துருக்கள் வானொலி நாடகமாகத் தயாரிக்கையில் 30 நிமிடங்களுக்கு உட்பட்டதாக அமைதல் வேண்டும். தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு வாழ்வியல், கல்வி, குழந்தை வளர்ப்பு, குடும்ப உறவு, போருக்குப் பின்னான வாழ்வாதாரச் சிக்கல்கள், நீர்வளம், இயற்கை வளப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் எழுத்துருவிற்கான பேசுபொருள் தெரிவு செய்யப்படலாம்.
நாடக எழுத்துருக்கள் அனைத்தும் 28.02.2015இற்கு முன்னதாக radiotamil3@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். எழுத்துருவின் பேசுபொருள், அதன் காலப்பொருத்தம், மொழிநடை, சமூக வாழ்வியல் பிரதிபலிப்பு ஆகிய அடிப்படைகளில், தகமையும் அனுபவமுமுள்ள நடுவர் குழுவினால் ஆராயப்பட்டு எழுத்துருக்களின் தரம் தீர்மானிக்கப்படும்.
முதல் மூன்று இடங்களையும் பெறும் நாடக எழுத்துருக்கள் வானொலி நாடகமாகத் தயாரிக்கப்பட்டு, தமிழ்3 வானொலியில் ஒலிரப்பப்படுவதோடு, உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் நாடகத்தைச் செவிமடுக்கும் வண்ணம் இணையத்தில் பதிவேற்றப்படும்.
தெரிவுசெய்யப்படும் முதல் மூன்று எழுத்துருக்களுக்கும் பின்வரும் பரிசுத்தொகை அளிக்கப்படும்: முதலாவது பரிசுத்தொகை: 25 000 இலங்கை ரூபாய்கள், இரண்டாவது பரிசுத்தொகை:15 000 இலங்கை ரூபாய்கள், மூன்றாவது பரிசுத்தொகை: 10 000 இலங்கை ரூபாய்களும் வழங்கப்படவுள்ளதாகவும் தமிழ்3 வானொலி அறிவித்துள்ளது.
இப்போட்டி குறித்த மேலதிகத் தகவல் எதுவும் தேவைப்படின் radiotamil3@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் நோர்வேயிலிருந்து ஒலிபரப்பப்படும் தமிழ்3 வானொலி 2015 ஜனவரி மாதம் இரண்டாவது அகவையினை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.