சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகினார் பசில் – தோல்விக்கு பொறுப்பேற்கிறார்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, இன்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் தனது சகோதரர் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததற்கு தாம் பொறுப்பேற்பதாகவும், பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவே மகிந்த ராஜபக்சவின் அதிபர் தேர்தல் பரப்புரைகளுக்கு பொறுப்பாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினராக அமரப் போவதாகவும், அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.
தற்போது பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.