சுதந்திரக் கட்சித் தலைமையை மைத்திரியிடம் ஒப்படைக்க மகிந்த முடிவு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை, புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைப்பதற்கு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, முடிவு செய்துள்ளதாக, சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றிரவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் நடத்திய கூட்டத்திலேயே அவர், கட்சித் தலைமையை ஒப்படைப்பதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக, கூறப்படுகிறது.
எனினும், இதற்கு விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கட்சி பிளவுபடும் நிலை தோன்றியுள்ளதால், மகிந்த ராஜபக்ச தலைமைப் பதவியை மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றிரவு நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று செய்தியாளர்களிடம் அறிவிக்கவுள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பிற்பகல் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்தச் சந்திப்பு, கொழும்பு, விஜேராம மாவத்தையில் உள்ள மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.