மைத்திரியைச் சந்திக்கிறார் மகிந்த
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அடுத்த சில நாட்களுக்குள் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த பிரிவின் தலைவர்களைக் கொண்ட குழுவொன்று கடந்த 12ம் நாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியது.
இதன்போதே, மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேச மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எனினும், பாப்பரசர் வருகையினால் உடனடியாக இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்ய முடியாது என்றும், மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
மரியாதை நிமித்தமான இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் டலஸ் அழகப் பெரும கூறியுள்ளார்.
எனினும், பாப்பரசர் இன்று புறப்படவுள்ளதால், அடுத்த சில நாட்களில் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.