மேலும்

விரைவில் கொழும்பு செல்கிறார் மோடி – உறவைப் பலப்படுத்துவதில் இந்தியா தீவிரம்

Narendra-Modiஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிக விரைவாக சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாகப் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையடுத்தே, இந்தியப் பிரதமரின் பயணத்தை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிய வருகிறது.

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரும் 18ம் நாள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மங்கள சமரவீர நேற்றுமுன்தினம் மாலை வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே, அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், புதுடெல்லி வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்தநிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றுக் காலையிலேயே, அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாகவும், 18ம் நாள் புதுடெல்லி வருவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்தப் பயணத்தின் போது இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து, இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் கலந்துரையாடவுள்ளனர்.

அத்துடன், இந்தப் பயணத்தின் போது, சிறிலங்காவுக்கு வருகை தருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கொடுத்தனுப்பும் அழைப்பையும், மங்கள சமரவீர கையளிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இதையடுத்து, இந்தியப் பிரதமரின் கொழும்புக்கான பயணம் விரைவில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்கா வருமாறு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பலமுறை அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், தற்போது சிறிலங்காவில் நிலைமை சாதகமாகியுள்ளதால், மிக விரைவாக இந்தியப் பிரதமரின் பயணம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அவரை இந்த மாதமே புதுடெல்லி வருமாறு தொலைபேசி மூலமான உரையாடலின் போது, அழைப்பு விடுத்திருந்தார் நரேந்திர மோடி.

எனினும், உள்நாட்டில் அவசரமாக கவனிக்க வேண்டிய விவகாரங்கள் இருப்பதால், அடுத்த மாத துவக்கத்தில் புதுடெல்லி வருவதாக மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணத்துக்கான ஒழுங்குகள் குறித்தும், மங்கள சமரவீர புதுடெல்லியில் கலந்துரையாடவுள்ளார்

இதனிடையே, சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் இந்தியாவுக்கு புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

இருதரப்பு உறவுகள் மீண்டும் வலுப்படுத்தப்படும் என்று நம்புவதாக இந்திய அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *