வரும் 18ம் நாள் புதுடெல்லி செல்கிறார் மங்கள சமரவீர – வேகமெடுக்கும் உறவு
சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள மங்கள சமரவீர, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் அழைப்பை ஏற்று வரும் 18ம் நாள் புதுடெல்லி செல்லவுள்ளார்.
நேற்றுமாலை வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற, மங்கள சமரவீரவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்றிரவு அழைப்பு விடுத்திருந்தார்.
இதை ஏற்றுக் கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வரும் 18ம் புதுடெல்லி வருவதாக அறிவித்துள்ளார்.
இதனை இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜகபக்சவின் காலத்தில், இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் காணப்பட்ட நெருடல் நிலையை போக்குவதற்கு இந்தியாவும், சிறிலங்காவின் புதிய அரசாங்கமும் ஆர்வம் காட்டி வருகின்றன.
மங்கள சமரவீரவின் புதுடெல்லிப் பயணத்தின் போது, முக்கியமான பல விவகாரங்கள் குறித்து ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தமிழர்களுடனான நல்லிணக்க செயல்முறைகள் குறித்து இந்தியா கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், மிகவிரைவாக இந்தியா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் அடுத்த மாத முதல்வாரத்தில் இந்தப் பயணம் இடம்பெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.