ஊவா மாகாணசபை ஐதேக வசம் – ராஜபக்ச குடும்ப ஆதிக்கம் முற்றாக ஒழிகிறது
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பெறாமகனின் கையில் இருந்த ஊவா மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தையும் ஐதேக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது.
இதனால், ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ச பதவி இழக்கவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஐந்து மாகாண சபை உறுப்பினர்கள், ஐதேக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
அத்துடன் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்ச பக்கம் ஓடிய ஐதேக மாகாணசபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியும், மீண்டும் ஐதேகவுக்குத் திரும்பியுள்ளார்.
இந்தநிலையில், ஐதேகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளதால், ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவரான ஹரீன் பெர்னான்டோ விரைவில் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.
இதற்கான எழுத்துமூல கோரிக்கையை அவர் மாகாண ஆளுநரிடம் விடுத்துள்ளார்.
அதேவேளை, கிழக்கு மாகாணசபையிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான் பலத்தை இழந்துள்ள நிலையில், வரும் 20ம் நாள் வரை சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதற்குள் புதிய அரசு அங்கு அமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஐதேக மற்றும் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அடுத்து வரும் நாட்களில் மேலும் பல மாகாணசபைகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கையில் இருந்து பறிபோகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.