போருக்குப் பிந்திய நிகழ்ச்சி நிரல் குறித்து மைத்திரியுடன் பான் கீ மூன் பேச்சு
சிறிலங்காவின் போருக்குப் பிந்திய நிகழ்ச்சி நிரல் குறித்து, புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.
இதுகுறித்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் தகவல் வெளியிடுகையில்,
“சிறிலங்கா அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது மற்றும், அதில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதற்கு, ஐ.நா பொதுச்செயலர் வாழ்த்துக் கூறினார்.
பான் கீ மூனும், மைத்திரிபால சிறிசேனவும், சிறிலங்காவின் அதிபரின் 100 நாள் செயற்திட்டம் மற்றும், சறிலங்காவில் போருக்குப் பிந்திய நிகழ்ச்சி நிரல் குறித்து கலந்துரையாடினர்.
சிறிலங்காவுக்குத் தொடர்ந்தும் ஐ.நா உதவும் என்றும் பான் கீ மூன் மீண்டும் உறுதியளித்தார்.” என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, கடந்த 9ம் நாள் ஐ.நா பொதுச்செயலர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சிறிலங்காவில் சுமுகமான முறையில் அதிகார கைமாற்றம் இடம்பெற்றது குறித்து வாழ்த்து தெரிவித்திருந்ததுடன், ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட்டதற்கும் வரவேற்புத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.