சிறிலங்காவுடன் பலமான உறவை எதிர்பார்க்கிறது பிரித்தானியா
சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன், பலமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு பிரித்தானியா எதிர்பார்த்திருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு டுவிட்டரில் அவர் வாழ்த்துக் கூறியுள்ளார்.
அந்தச் செய்தியிலேயே, புதிய அரசாங்கத்துடன், பலமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு பிரித்தானியா எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சீனப் பிரதமரும் ரணிலுக்கு வாழ்த்து
சிறிலங்காவின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, சீனப் பிரதமர் லீ கெகியாங்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொழும்புடன் பீஜிங் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளினால் இணைந்திருப்பதாகவும், பரஸ்பர மரியாதை அடிப்படையில் மூலோபாய கூட்டணியை முன்னெடுக்க தயாராக உள்ளதாகவும் சீனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சீனாவும் சிறிலங்காவும், பாரம்பரியம் மிக்க நட்புரீதியான அயல் நாடுகள் என்றும், பல்வேறு மட்டங்களில் நெருக்கமான தொடர்புகளையும் பயனுள்ள ஒத்துழைப்புகளையும் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்துத் தெரிவித்து செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில் அவர், இருதரப்பு உறவுகள் புதிய உச்சத்தை எட்டுவதற்கு வாழ்த்துவதாக குறிப்பிட்டிருந்தார்.