தேசிய அரசில் பங்குகொள்ள அழைக்கிறார் மைத்திரி
தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன.
புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், இன்று முற்பகல் கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடபட்டனர்.
பின்னர் கண்டி மீரா மக்கம் பள்ளிவாசலுக்கு சென்று சிறப்பு துஆ பிரார்த்தனையில் ஈடுபட்ட அவர்கள், அதையடுத்து கண்டி ஸ்ரீ செல்வவிநாகர் ஆலயத்திற்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர் தலதா மாளிகையின் மாடத்தில் (பத்திரிப்பு) இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் மைத்திரிபால சிறிசேன.
இதன்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவர் தனது உரையில், நட்புறவு சார்ந்த வெளிநாட்டுக் கொள்கை மூலம், உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
அதிபரிடம் உள்ள வரையறையற்ற நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம், அமைச்சரவை, நீதித்துறையிடம் கைமாற்றப்படும் என்றும் மைத்திரிபால சிறிசேன உறுதி வழங்கினார்.
இதுவே தாம் எதிர்கொண்ட முதலும் கடைசியுமான அதிபர் தேர்தல் என்றும், தான் இனி ஒருபோதும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.