அமெரிக்காவுக்குத் தப்பியோடினார் பசில் ராஜபக்ச
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச, இன்று அதிகாலை தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, இன்று அதிகாலை புறப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில் அவர் டுபாய் நோக்கிப் பயணம் மேற்கொண்டார்.
அங்கிருந்து. அவர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லவுள்ளார்.
பசில் ராஜபக்சவும் அவரது மனைவியும், விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்களுக்கான நுழைவாயில் வழியாக வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, ராஜபக்ச குடும்பத்தினர் ஒவ்வொருவராக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஏற்கனவே, மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரர், டட்லி ராஜபக்ச நேற்றுக்காலை பாங்கொக்கிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர் தேர்தலுக்கு முன்னதாக, சிறிலங்கா வந்து தங்கியிருந்தார்.
இதனிடையே ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவர், நேற்று டுபாய்க்குச் சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை பசில் ராஜபக்ச இன்று அதிகாலையில் நாட்டை விட்டு வெளியேறியதை உறுதிப்படுத்தியுள்ள அதிபர் மைத்திரிபாலவின் ஊடகப் பிரிவு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், சிறிலங்காவை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நேற்று தங்காலையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தான் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் தோல்விக்குப் பின்னர், பசில் ராஜபக்சவும் இவ்வாறே குறிப்பிட்டிருந்தார். எனினும், அவர் தற்போது அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றிருக்கிறார்.
பசில் ராஜபக்சவை தப்பிச் செல்ல அனுமதித்தது குறித்து, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மீது விசனம் தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய கொள்ளைக்காரரை, விசாரணைக்கு உட்படுத்தாமல், நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல அனுமதித்தது தவறு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.