மகிந்தவின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியிடம் சரண்
மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பணியாற்றிய, 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்றுமாலை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
சரத் அமுனுகம, அதாவுட செனிவிரத்ன, ரெஜினோல்ட் குரே, பியசேன கமகே, விஜயமுனி சொய்சா, ரி.பி.எக்கநாயக்க, எஸ்.பி.நாவின்ன, சனத் ஜெயசூரிய, கருணா மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜெயசேகர உள்ளிட்டோரே புதிய அரசுடன் இணைய முன்வந்துள்ளனர்.
முன்னைய தகவல்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகர்களும், மகிந்த ராஜபக்ச அரசின் முன்னாள் அமைச்சர்களுமான, சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்துக்கு வந்துள்ளனர்.
கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் உள்ள மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்துக்கு வந்துள்ளவர்களில், சரத் அமுனுகம, அதாவுட செனிவிரத்ன, ரெஜினோல்ட் குரே, பியசேன கமகே ஆகியோர் இந்தக் குழுவில் அடங்கியுள்ளனர்.
மேலும், வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜெயசேகரவும் இதில் அடங்கியுள்ளார்.
அவர்கள், மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் 15 பேர் தற்போது அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டம், கொழும்பில் உள்ள அதன் தலைமையகத்தில் மகிநத ராஜபக்சவின் தலைமையில் தற்போது நடந்து வருகிறது.