சிறிலங்காவின் புதிய அதிபராக மைத்திரி இன்று மாலை பதவியேற்பு
சிறிலங்காவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை புதிய அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
அத்துடன் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நாளை பதவியேற்பார் என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள, மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவவில் இருந்து கொழும்புக்கு வந்து சேர்ந்துள்ளார்.
அவர் இன்று மாலை 6 மணியளவில், கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும நிகழ்வில் மூத்த நீதியரசர் ஒருவர் முன்னிலையில் பதவியேற்பார் என்று தெரிய வருகிறது.
சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் முன்பாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
பிரதம நீதியரசராக இருந்த சிராணி பண்டாரநாயக்க பழிவாங்கல் அடிப்படையில், நீக்கப்பட்டதால், மொகான் பீரிசை பிரதம நீதியரசராக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று காலையில் மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறியதுடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்தும் பேசியுள்ளார்.
இதற்கிடையே, இன்று மாலை புதிய அதிபர் மற்றும், பிரதமர் பொறுப்பேற்கும் போது, பதிய பாதுகாப்புச் செயலரும் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
https://www.facebook.com/Serendibmedia/photos/a.1632611116966013.1073741828.1617908458436279/1670780056482452/?type=1&relevant_count=1