விறுவிறுப்பாக நடக்கிறது வாக்களிப்பு – மகிந்தவும் வாக்களித்தார்
சிறிலங்காவில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
வாக்களிப்பு ஆரம்பமாகி இரண்டரை மணிநேரம் கடந்துள்ள நிலையில், இதுவரை சுமுகமாக வாக்குப்பதிவு இடம்பெறுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் சுறுசுறுப்புடன் வாக்களிக்கச் செல்கின்றனர்.
பல வாக்களிப்பு நிலையங்களில் காலையில் இருந்தே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்த வாக்களித்து வருகின்றனர்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மெதமுலானவில் உள்ள ராஜபக்ச வித்தியாலயத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்.
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவவில் வாக்களித்துள்ளார்.
இதற்கிடையே, வாக்காளர்களைக் குழப்பும் விசமத்தனமான பேரப்புரைகளில் அரசதரப்பு ஈடுபட்டுள்ளது.
வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில், வெளியிடப்பட்டுள்ள போலி பிரசுரங்களில், வாக்களிக்க வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.
அதேவேளை. அம்பாந்தோட்டையில், மகிந்த ராஜபக்சவுக்கு ஐதேக பிரதி தலைவர் சஜித் பிரேமதாச ஆதரவளித்துள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் சிறிலங்கா அரசாங்கம் அரச ஊடகங்கள் மூலமும் மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரைகளை முன்னெடுத்து வருகிறது.
எனினும், எந்தக் குழப்பமும் இன்றி வாக்களிக்குமாறு கண்காணிப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.