பின்கதவுப் பேரம் மூலம் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது – இரா.சம்பந்தன்
தமிழ்மக்களின் தேசியப் பிரச்சினைக்கு பின்கதவுப் பேரம் மூலம் தீர்வு கண்டுவிட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் செய்து கொள்ளப்பட்ட இரகசிய உடன்பாட்டின் அடிப்படையில் தான், அவரை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,
“பின்கதவுப் பேரத்தின் மூலம் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட முடியாது.
அத்தகைய ஒரு உடன்பாடு சாத்தியமற்றது. நாம் அந்த வழியைத் தேர்வு செய்யமாட்டோம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்க நிலையான, சாத்தியமான தீர்வு ஒன்றையே எதிர்பார்க்கிறது.
அத்தகையதொரு தீர்வைக் காண்பதற்கு மைத்திரிபால சிறிசேன, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.