சிறிலங்கா: இயற்கை பேரிடருக்குள் சிக்கி தவிக்கும் மலையகம் – 19 பேர் பலி
சிறிலங்காவின் மத்திய பகுதியில் பெய்த கடும் மழையின் காரணமாக வெள்ளியன்று இடம்பெற்ற மண்சரிவில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் பத்துப் பேர் வரை காணாமற் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த நான்கு நாட்களாக சிறிலங்காவின் பெரும்பாலான இடங்களில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் 60,000 வரையான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் 3000 வீடுகள் அழிவடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேயிலை பயிரிடப்படும் பதுளை மாவட்டத்தில் வெள்ளியன்று இடம்பெற்ற மண்சரிவில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், மண்சரவின் போது இவர்களுடைய வீடுகள் நிலத்தில் புதையுண்டதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அதிகாரி உதய குமார தெரிவித்துள்ளார்.
பத்துப் பேர் வரை காணாமற் போயுள்ளதாகவும் மண்சரிவு மேலும் ஏற்படலாம் என்கின்ற ஆபத்தின் காரணமாக தற்காலிகமாக மீட்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உதய குமார மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா முழுவதிலும் நிலவும் சீரற்ற வானிலையின் தாக்கத்தால் 500,000 வரையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காத் தீவின் பல பகுதிகளிலும் இடிமுழக்கத்துடன் கூடிய மழை பெய்யும் என்பதால் கரையோர வாழ் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வானவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
சிறிலங்காவின் சில பகுதிகள் தற்போது பருவப்பெயர்ச்சி மழை பெறுவது வழமை எனவும் ஆனால் வழமைக்கு மாறாக சில இடங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் மத்திய பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் கடந்த ஒக்ரோபரில் இடம்பெற்ற மண்சரிவின் போது பலர் படுகொலை செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதே.
இதே வேளையில், பதுளை மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவுகளில் சிக்கி, 19 பேர் உயிரிழந்துள்ளதாக பதுளை மாவட்ட பேரிடர் முகாமைத்துவ நிலையத்தின் துணை இயக்குநர் ஈ.எல்.எம். உதயகுமார பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இவர்களில் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 8 பேரின் சடலங்களை மீட்கமுடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பதுளை, லுனுகலை, பண்டாரவளை, ஊவ பரணகம, பசறை, ஹாலிஎல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் இந்த மண்சரிவு அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.