தோல்வியுற்றால் அமைதியாக ஆட்சியை ஒப்படைப்பேன் – உறுதி கூறுகிறார் மகிந்த
அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றால் அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்து விடுவேன் என்று மீண்டும் உறுதியளித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
பினான்சியல் ரைம்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.
மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள செவ்வியில் அவர், “முதலில், நான் தோற்கமாட்டேன்.
ஆனால், முதிர்ந்த துடிப்பான ஜனநாயக நாடான சிறிலங்காவில் எப்போதுமே அமைதியான முறையில் அதிகாரமாற்றம் இடம்பெற்று வந்திருக்கிறது.
ஆனால், மீண்டும் சொல்கிறேன், நாம் வெற்றி பெறுவோம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
மூன்றாவது பதவிக்காலத்தில், இன்னும் அதிகமான வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு பணியாற்றுவேன்.
சீனாவுடன் சிறிலங்கா நெருக்கமான பொருளாதார உறவுகளைத் தொடர்ந்து பேணும்.
சீனாவின் முதலீடுகளில் இருந்து சிறிலங்கா நன்மைகளைப் பெறுகிறது. சிறிலங்கா மட்டுமே, சீனாவிடம் இருந்து நன்மைகளை அனுபவிக்கும் நாடு அல்ல.
சீனாவிடம் இருந்து மட்டும், முதலீடுகள் அதிகரிப்பதை நாம் எதிர்பார்க்கவில்லை. ஏனைய பல நாடுகளிடம் இருந்தும் முதலீடுகளை நாம் எதிர்பார்க்கிறோம்.
சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், மேற்குலக நாடுகளால் போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் கூட, சிறிலங்காவில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன.
முதலீட்டாளர்களால் இந்த குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நான் நினைக்கிறேன்.
சிலர் கூறுவது போல அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களையோ, மனித உரிமைச் சட்டங்களையோ சிறிலங்கா மீறவில்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும்.
மனித உரிமைகள் குறித்த விமர்சனங்கள் காலப்போக்கில், பலவீனம் அடைந்து, வலுவிழந்து போகும் என்று நான் நினைக்கிறேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.