சிறிலங்காவில் நாளைமறுநாள் அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பம்
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு நாளைமறுநாள் ஆரம்பமாகவுள்ளது. இந்த தேர்தலில், 541,432 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக, சிறிலங்கா தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
வரும் 23, 24, 26ம் நாள்களில், அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்ற அரசபணியாளர்கள், இந்த தேர்தலில் வாக்களிக்க முடியும்.
இம்முறை அஞ்சல் வாக்களிப்புக்காக நாடுமுழுவதும் 700 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அஞ்சல் மூல வாக்களிப்பைக் கண்காணிக்க நாடு முழுவதிலும் உள்ள அரச பணியகங்களிலும், படைமுகாம்கள் மற்றும் காவல்நிலையங்களிலும் சுமார் 1000 கண்காணிப்பாளர்களை தாம் பணியில் அமர்த்தவுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்பின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தமுறை, அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு அனுமதி கோரியவர்களில் 14 வீதமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
85,521 பேரின் அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் நேரடியாக வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
வரும் 26ம் நாளுக்கு முன்னதாக, வாக்களிக்கத் தவறியவர்கள், மாவட்டச் செயலகங்களில் வரும் 30ம் நாளுக்கு முன்னதாக தமது வாக்குகளை அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் மூலம் வாக்களிப்போரில் சிறிலங்காவின் ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையில் பணியாற்றுவோரோ அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.