சிங்கப்பூரின் உத்தி சிறிலங்காவுக்கு தேவையில்லை – மகிந்தவின் அடுத்த குத்துக்கரணம்
சிறிலங்காவைச் சிங்கப்பூர் ஆக்குவேன் என்று முன்னைய ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இப்போது சிங்கப்பூரின் முகாமைத்துவ உத்தி சிறிலங்காவுக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
திருகோணமலை சேருநுவர பிரதேசசபை மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
“சில குழுவினர் அரசாங்க வளங்களை தனியாருக்கு விற்பதற்கு முயற்சிக்கின்றனர்.
அரசாங்கத்தினால் கட்டப்பட்ட துறைமுகம், விமான நிலையம், சக்தி மற்றும் நெடுஞ்சாலைகளையே இவர்கள் தனியாருக்கு விற்க முயற்சிக்கின்றனர்.
சிங்கப்பூரின் முகாமைத்துவ உத்தி சிறிலங்காவுக்குத் தேவையில்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனது இரண்டாவது பதவிக்காலத்துக்குப் போட்டியிட்ட போது, ஆசியாவின் அதிசயமாக சிறிலங்காவை மாற்றுவேன் என்றும், சிங்கப்பூராக மாற்றுவேன் என்றும் மகிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் தற்போது அவர், சிங்கப்பூரின் உத்தி சிறிலங்காவுக்குத் தேவையில்லை என்று குத்துக்கரணம் அடித்துள்ளார்.
அதேவேளை நேற்று திருகோணமலை கிண்ணியாவிலும் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடியிலும் மகிந்த ராஜபக்ச நேற்று பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்றார்.