ஹக்கீமுடன் அரசதரப்பு அவசர பேச்சு – முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநாடு செல்லத் தடை
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையில் அதிபர் தேர்தல் தொடர்பாக நேற்று மாலையில் உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெறும் முயற்சியில் அரசதரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதேவேளை, எதிரணியுடன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரசும், கட்சியை அரசதரப்பு உடைக்கலாம் என்ற அச்சத்தில், தமது முடிவை அறிவிப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.
இந்தநிலையில், நேற்றுமாலை ஆளும்கட்சியின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேச்சு நடத்தியுள்ளார்.
அமைச்சர்கள் சுசில் பிறேம் ஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, டலஸ் அழகப்பெரும உள்ளிட்டோர், அதிபர் செயலகத்தில் ரவூப் ஹக்கீமுடன் பேச்சு நடத்தினர்.
இந்த பேச்சுக்களில் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவும் பங்கேற்றிருந்தார். சுமார் ஒன்றரை மணிநேரமாக இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
பேச்சுக்கள் இடம்பெற்றதை உறுதிப்படுத்தியுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இதன் பெறுபேறுகள் என்ன என்பதை வெளியிடவில்லை.
இதற்கிடையே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களை நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை வெளிநாடு செல்வதற்கு, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்றிரவு தடைவிதித்துள்ளார்.
கட்சிதாவல் இடம்பெறுவதை தடுப்பதற்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.