திருப்பதியில் இருந்து திரும்பிய மகிந்தவை அலரி மாளிகைக்கு செல்லவிடாமல் தடுத்த ஹிருணிகா
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வசம் உள்ள மேல் மாகாணசபையின் ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேரடியாக இறங்கியுள்ளார்.
மேல் மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக எதிரணியின் பக்கம் சாயத் தொடங்கியுள்ளதால் சிறிலங்கா அதிபர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஏற்கனவே ஜாதிக ஹெல உறுமயவின் உதய கம்மன்பில, நிசாந்த சிறிவர்ணசிங்க மற்றும் களுத்துறை மாவட்ட உறுப்பினரான கீர்த்தி காரியவசம் ஆகியோர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், ஹிருணிகா பிறேமச்சந்திரவும் மைத்திரிபாலவின் பக்கம் சாய்ந்துள்ளதால், மேல் மாகாணசபையில் ஆளும்கட்சிக்குள் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.
மேல் மாகாணசபைத் தேர்தலில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிரு இடங்களைப் பிடித்தவர்களான ஹிருணிகாவும், உதய கம்மன்பிலவும், எதிரணிக்குத் தாவியது, மகிந்த ராஜபக்சவை கடுமையாக அதிர்ச்சியடைய வைத்துள்ளது..
நேற்றுமுன்தினம் மாலை திருப்பதிக்குச் சென்றிருந்த, மகிந்த ராஜபக்ச அங்கிருந்து நேற்றுக்காலை கொழும்பு திரும்பினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர், நேராக அலரி மாளிகைக்குச் செல்லாமல், மேல் மாகாண முதல்வர் பிரசன்ன ரணதுங்கவின் கொழும்பு இல்லத்துக்குச் சென்று, மேல் மாகாணசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
மேல் மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் தமது பக்கத்தில் இருந்து செல்லாமல் தடுப்பதற்காக ஒவ்வொருவருடனும் தனித்தனியாக பேசி அவர்களின் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.
மைத்திரிபாலவின் பக்கம் சாயலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும், பிரதி அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் மகளும், மாகாணசபை உறுப்பினருமான மால்சா குமாரதுங்கவும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.