ஐ.நா கண்காணிப்பாளர்களை அழைக்கமாட்டேன் – சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர்
அதிபர் தேர்தலைக் கண்காணிக்க ஐ.நா கண்காணிப்புக் குழுவை அழைக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்டார்.
“வழக்கமாக, பிரதான தேர்தல்களைக் கண்காணிக்க ஆசிய, ஐரோப்பிய ஒன்றிய, கொமன்வெல்த் கண்காணிப்பாளர்களையே அழைப்போம்.
அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, ஐரோப்பிய கண்காணிப்பாளர்களுக்கு நான் அழைப்பு விடுக்கவுள்ளேன்.
இந்த தேர்தலைக் கண்காணிக்க ஐ.நா கண்காணிப்பாளர்கள் தேவையில்லை என்று உணர்கிறேன்.
முதல்முறையாக தேர்தல் நடைபெறும் போது அல்லது தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக தீவிரமான கவலைகள் உள்ள சூழ்நிலையில் தான் ஐ.நா கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படுவர்.
சிறிலங்காவின் தேர்தல் முறையில் அந்தளவுக்குப் பாரதூரமான கவலைகள் இல்லை.
எனவே ஐ.நா கண்காணிப்பாளர்கள் தேவையில்லை.
வரும் வரும் ஜனவரி மாதம் 8ம் நாள் அதிபர் தேர்தல் நடைபெறும்.
இந்த தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு வரும் டிசம்பர் 23,24ம் நாள்களில் இடம்பெறும்” என்றும் சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.