மேலும்

மாவீரர்களை நினைவுகூர விடமாட்டோம் – சிறிலங்கா இராணுவம், காவல்துறை சூளுரை

வரும் 27ம் நாள் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், விடுதலைப் புலிகளை மகிமைப்படுத்தும் நினைவு கூரல் நிகழ்வுகளை நடத்த அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா இராணுவமும், சிறிலங்கா காவல்துறையும் தெரிவித்துள்ளன.

வரும் 27ம் நாள் தமிழீழ மாவீரர் நாள் தமிழர்கள் வாழும் இடமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் சிறிலங்கா இராணுவத்தினர் மேலதிக கண்காணிப்பு நிலைகளை அமைத்து பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.

பல்கலைக்கழகச் சுற்றாடலில் சிறிலங்கா இராணுவத்தினரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கல்விச் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், மாவீரர் நாளை நினைவு கூருவதற்கு அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

“விடுதலைப் புலிகள் இயக்கம் சிறிலங்காவில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு.

மாவீரர் என்ற பெயரிலோ அல்லது வேறு பெயர்களிலோ, தீவிரவாதத்தை மகிமைப்படுத்துவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்.

அத்தகைய நிகழ்வுகளை நாம் தடுத்து நிறுத்துவோம்.

யாழ்ப்பாணத்தில் இத்தகைய நிகழ்வுகளைத் தடுப்பதற்காக மேலதிக கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ளதாகவும், சிறிலங்கா படையினரின் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை.

யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள படையினரைக் கொண்டே, அங்கு அமைதியை நிலைநாட்ட முடியும்.

தீவிரவாதத்தை போற்றும் எந்த நிகழ்வின் மூலமும் அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்த விடமாட்டோம்

பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளில் சிறிலங்கா இராணுவம் தலையிடுவதில்லை.

பல்கலைக்கழகத்தை மூடுவது அல்லது திறப்பது குறித்து நாம் தீர்மானிப்பதில்லை, அதனை தீர்மானிப்பது உயர் கல்வி அமைச்சுத் தான்.

வடக்கில் இராணுவத்தின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, தீவிரவாதத்தை பகிரங்கமாக நினைவு கூருவதற்குத் தாமும் அனுமதிக்கமாட்டோம் என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகணவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *