கடல் பாதுகாப்புக்கு பாரிய ரேடர் கண்காணிப்பு வலையமைப்பை உருவாக்குகிறது இந்தியா
இந்தியாவைச் சுற்றியுள்ள கடற்பிராந்தியத்தைக் கண்காணிக்கும் வகையில், பாரிய ரேடர் கண்காணிப்பு வலையமைப்பு ஒன்றை இந்தியப் பாதுகாப்பு அமைச்சு ஆரம்பிக்கவுள்ளது.
தகவல் முகாமைத்துவம் மற்றும் ஆய்வு நிலையம் Information Management and Analysis Centre (IMAC) என்ற பெயரில் செயற்படவுள்ள இந்தப் பாரிய ரேடர் கண்காணிப்பு வலையமைப்பு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகிக்கப்படவுள்ளது.
இந்தியக் கடற்படை அதிகாரிகள் முகாமைத்துவம் செய்யவுள்ள இந்த நிலையத்தை, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்த தகவல் முகாமைத்துவம் மற்றும் ஆய்வு நிலையத்தின் கீழ், சிறிலங்காவிலும், மாலைதீவிலும் அமைக்கப்பட்டுள்ளவை உள்ளிட்ட- 40இற்கும் அதிகமான இந்திய ரேடர்கள் மற்றும் செய்மதிகளும், ஒருங்கிணைக்கப்பட்டு, இந்தியாவைச் சுற்றியுள்ள கடற் பிராந்தியத்தில் உள்ள நடமாட்டங்கள் குறித்து முழுமையான தகவல்கள் சேகரிக்கப்படும்.
பாகிஸ்தானில் இருந்து கடல்வழியாக இழுவைப்படகு ஒன்றில் வந்திறங்கிய 10 தீவிரவாதிகள், கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்திய பின்னரே இந்த வலையமைப்பின் அவசியம் உணரப்பட்டது.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு நிபுணர் பிரிகேடியர் குர்மீட் கன்வல், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த கடல்சார் பாதுகாப்புக்கு, இந்த நிலையம் ஒரு பெரும் உத்வேகத்தைக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.