நான்காவது கட்ட ஈழப்போரில் கடற்படையின் அனுபவங்கள் – நூலை வெளியிட்டார் முன்னாள் தளபதி
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட எழுதிய அதிஸ்டானய (விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததில், கடற்படையின் பங்கு) என்ற நூல் இன்று காலை கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணியளவில் நெலும்பொக்குண மகிந்த ராஜபக்ச அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மகிநத ராஜபக்சவிடம், அட்மிரல் வசந்த கரன்னகொட, நூலின் முதற்பிரதியைக் கையளித்தார்.
இந்த நூலில், அட்மிரல் வசந்த கரன்னகொட, நான்காவது கட்ட ஈழப்போரில் சிறிலங்கா கடற்படை ஆற்றிய பங்களிப்பு பற்றிய தனது அனுபவங்களை எழுதியுள்ளார்.
அத்துடன் சிறிலங்கா கடற்படை போரில் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்தும் இந்த நூலில் விபரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள், பந்துல குணவர்தன, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் முப்படைத் தளபதிகள், படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.