போர்க்குற்ற சாட்சியங்களை கோருகிறது சிறிலங்கா அதிபர் ஆணைக்குழு
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த எழுத்து மூலமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவே, போர்க்குற்றங்கள் குறிதும் விசாரணை நடத்தும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார்.
இந்த ஆணைக்குழுவின் பணிகளை விரிவுபடுத்துவது குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜுலை மாதம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கமைய, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த எழுத்து மூலமான சாட்சியங்களை வரும் டிசம்பர் 31ம் நாளுக்கு முன்னதாக சமர்ப்பிக்கும்படி, ஆணைக்குழுவின் செயலர் குணதாச தெரிவித்துள்ளார்.
எழுத்து மூலமான சாட்சியங்களைப் பெறும் காலஎல்லை முடிவடைந்த பின்னர், அந்த சாட்சியங்களை அதிபர் ஆணைக்குழு பரிசீலுனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.