பன்டுங் மாநாட்டுக்கு சரத் அமுனுகமவை அனுப்புகிறார் மைத்திரி
இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பன்டுங் நகரங்களில் நடைபெறவுள்ள ஆசிய-ஆபிரிக்க மாநாட்டு அமைப்பின் 60வது ஆண்டு நிறைவு உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபரின் சிறப்புப் பிரதிநிதியாக, உயர்கல்வி அமைச்சர் சரத் அமுனுகம கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு, அமைச்சர் சரத் அமுனுகம நாளை இந்தோனேசியா புறப்படவுள்ளார்.
பன்டுங் மாநாட்டு அமைப்பு என்று அழைக்கப்படும், ஆசிய ஆபிரிக்க மாநாட்டு அமைப்பில் 60வது ஆண்டு நிறைவு மாநாடு, வரும் 22ம் நாள் தொடக்கம், 24ம் நாள் வரை நடைபெறவுள்ளது.
இதில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்பதாக முன்னர் உறுதிப்படுத்தியிருந்தார்.
ஆனால், தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்த மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை என்றும், அதனால், தனது சிறப்புப் பிரதிநிதியாக, அமைச்சர் சரத் அமுனுகமவை அனுப்பி வைக்கவுள்ளதாகவும், சிறிலங்கா அதிபர் செயலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
1955ம் ஆண்டு ஏப்ரல் 18ம் நாள் தொடக்கம் 24ம் நாள் வரை, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பர்மா மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகள் இணைந்து இந்தோனோசியாவின் பன்டுங் நகரில் ஆசிய ஆபிரிக்க மாநாட்டு அமைப்பின் முதலாவது கூட்டத்தை நடத்துவதில் முக்கிய பங்காற்றியிருந்தன.
1955ம் ஆண்டு 29 ஆசிய- அபிரிக்க நாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 100இற்கும் அதிகமான நாடுகள் அங்கம் வகிக்கின்றன.