தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியில் போராட்டம்
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் காணிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக பௌர்மணி தோறும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விகாரையை அகற்றி பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி நேற்று பிற்பகல் 4 மணி தொடக்கம் 6 மணிவரை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை தொடக்கம் கொட்டும் மழைக்கு மத்தியில் இரண்டாவது நாளாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.


