சுஸ்மா, ராஜ்நாத் சிங், டோவலுடன் ரணில் தனித்தனியாகப் பேச்சு
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோருடன் தனித்தனியாகப் பேச்சு நடத்தினார்.
இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும், சிறிலங்கா பிரதமருக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும், சிறிலங்கா பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின் போது, இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேவேளை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடனும் சிறிலங்கா பிரதமர் பேச்சுக்களை நடத்தியிருந்தார். எனினும், முக்கியத்துவம் மிக்க இந்தப் பேச்சுக்களின் விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்தச் சந்திப்புகளில் சிறிலங்கா அமைச்சர்கள் சாகல ரத்நாயக்க, அர்ஜூன ரணதுங்க, மலிக் சமரவிக்ரம மற்றும் சிறிலங்கா அதிகாரிகளும், இந்திய அதிகாரிகளும் பங்கேற்றனர்.