சிறிலங்காவுடனான உறவுகளைச் சீர்குலைக்க வெளிநாட்டு சக்திகள் முயற்சி – சீனத் தூதுவர்
சிறிலங்கா- சீனா இடையிலான உறவுகளைச் சீர்குலைக்க சில குறிப்பிட்ட வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவைச் சந்தித்த போதே சீனத் தூதுவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்கா- சீனா இணைந்த பாரிய திட்டங்கள் தொடர்பாக ஆதாரமற்ற ஊகங்களைத் தூண்டுவதன் மூலம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைச் சீர்குலைக்க இந்த வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன.
தமது சொந்த நலன்களுக்காக இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கி விட முற்படுகின்றன.
சிறிலங்காவுடனான நட்புறவு மற்றும் நடைமுறை ஒத்துழைப்புக்குப் பின்னால் சீனா இராணுவ நோக்கத்தைக் கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகளையும் சீனத் தூதுவர் நிராகரித்துள்ளார்.