சிறிலங்கா கடற்படைத் தளபதியாக சிறிமேவன் ரணசிங்க நியமனம்
சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக, றியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நாளை தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா செப்ரெம்பர் 26ஆம் நாளுடன், 55 ஆவது வயதை எட்டியிருந்தார். இதையடுத்து, அவருக்கு சிறிலங்கா அதிபர் ஒரு மாத சேவை நீடிப்பு வழங்கியிருந்தார்.
அவருக்கான சேவை நீடிப்பு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையிலேயே, புதிய கடற்படைத் தளபதியாக றியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன், வைஸ் அட்மிரலாகவும், சிறிமேவன் ரணசிங்க பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர் சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ இன்று வழங்கியுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் நாள் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, இரண்டு மாதங்கள் மாத்தி்ரமே பதவியில் இருந்துள்ளார்.
சிறிலங்கா கடற்படை வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பதவியில் இருந்த தளபதி இவரே என்பது குறிப்பிடத்தக்கது.