களைகட்டாத மகிந்தவின் கடைசிப் பரப்புரை மேடை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் நேற்றிரவு கஸ்பேவவில் இடம்பெற்றது.
நேற்றைய இறுதிப் பரப்புரைக் கூட்டத்தில், எதிரணியின் முக்கிய தலைவர்கள் சிலர், ஆளும்கட்சியுடன் இணையலாம் என்று ஊகங்கள் வெளியாகியிருந்தன.
சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா, ஹரின் பெர்னான்டோ உள்ளிட்டோர், அரசதரப்புக்குத் தாவலாம் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், எதிரணியினரோ, ஆளும்கட்சியின் முக்கிய தலைவர்களோ இல்லாமல் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இறுதிப் பரப்புரை மேடையில் அமர்ந்திருந்தார்.
விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் மட்டுமே அவர் அருகில் மேடையில் அமர்ந்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச தாம் வெற்றி பெற்ற பின்னர் எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கக் கூடாது என்று தமது ஆதரவாளர்களிடம் கோரியிருந்தார்.
தனது வெற்றி உறுதி என்று குறிப்பிட்ட அவர், மீண்டும் ஒரு முறை நாட்டைப் பிரிப்பதற்கு தான் அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறினார்.
வெளிநாட்டு அழுத்தங்களுக்கு, அடிபணிய மறுத்ததால், சில மேற்கு நாடுகள் தன்னை பதவியில் இருந்து அகற்ற முயற்சிப்பதாகவும் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டினார்.
வடக்கில் இருந்து இராணுவத்தைக் குறைக்கும்படி தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும் அதனைத் தான் நிராகரித்து விட்டதாகவும், தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச, ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கஸ்பேவ கூட்டத்தில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
பொறுத்திருந்து பாருங்கள், தேர்த்லுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன” என்று தெரிவித்தார்.