பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமிக்கும் யோசனை இல்லையாம்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சி்றிலங்கா இராணுவத் தளபதியாகவோ, ஒட்டுமொத்தப் படைகளினதும் தளபதியாகவோ நியமிக்கும் யோசனையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்மொழியவில்லை என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“ஊடகங்களில் செய்திகள் வெளியானது போன்று, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சி்றிலங்கா இராணுவத் தளபதியாகவோ, ஒட்டுமொத்தப் படைகளினதும் தளபதியாகவோ நியமிக்கும் யோசனையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்மொழியவுமில்லை, அத்தகைய பதவியை சரத் பொன்சேகா கேட்கவுமில்லை.
அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான பொறிமுறையை நடைமுறைப்படுத்த உதவ முடியுமா என்று தான் சிறிலங்கா அதிபர் சரத் பொன்சேகாவிடம் கேட்டார். அதற்கு பொன்சேகா இணங்கியுள்ளார்.
முன்னறிவிப்பின்றி தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்களினால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் வசதியீனங்கள் தொடர்பாக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.
அப்போது தான், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் கூறினார். போர்க்காலத்தில் கூட அத்தகைய பொறிமுறைகள் இருந்தன” என்றும் குறிப்பிட்டார்.