பான் கீ மூன் மீது பாய்கிறது சிறிலங்கா அரசாங்கம்
அமைதியானதும், நம்பகமானதுமான தேர்தலை நடத்த வலியுறுத்திய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையாக கண்டித்துள்ளது.
சிறிலங்காவில் அதிபர் தேர்தல் அமைதியாகவும், நம்பகமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.
பான் கீ மூன் தவறான அனுமானங்களைச் செய்வதாக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
“சிறிலங்கா 80 ஆண்டுகளாக ஜனநாயக தேர்தல் நடைமுறையை கொண்டுள்ள ஒரு நாடு என்றும், பான் கீ மூனின் நாடு, ஜனநாயக வாக்குரிமையை பெறுவதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்னரே, சிறிலங்கா அந்த உரிமைகளை அனுபவித்து வருகிறது.
ஜனநாயக ரீதியாக, நம்பகமான தேர்தல் குறித்த கேள்வி எழுந்துள்ள நாடுகளின் தலைவர்களிடமோ, அரசாங்கங்களிடமோ, ஐ.நா பொதுச்செயலர் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கவில்லை.
துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்ட சிறிலங்காவுக்கு அவர் இதுபற்றிப் போதித்துள்ளார்” என்றும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.