கோட்டே தொடருந்து நிலைய குண்டுவெடிப்பு – தேவதாசனுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை
கொழும்பு- கோட்டே தொடருந்து நிலையத்தில், நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட கனகசபை தேவதாசனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 3ஆம் நாள், கோட்டே தொடருந்து நிலையத்தில் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் குண்டை வெடிக்கச் செய்ததில், 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் வரை காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட பெண் தற்கொலைக் குண்டுதாரிக்கு, உதவியாகவும் உடந்தையாகவும் இருந்தார் என்றும், சதித் திட்டம் தீட்டினார் என்றும் நாடன் எனப்படும் கனகசபை தேவதாசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட கனகசபை தேவதாசனுக்கு, 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கரவெட்டியைச் சேர்ந்த கனகசபை தேவதாசன் சிறிலங்காவின் திரைப்படக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபையின் உறுப்பினராக இருந்த போது, கொழும்பில் விடுதலைப் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில், 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.