மோடியின் சிறிலங்கா பயணம் – மகாநாயக்கர்களுக்கு இந்திய தூதுவர் விளக்கம்
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து நேற்று கண்டியில் மகாநாயக்கர்களைச் சந்தித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மே மாதம் சிறிலங்கா வரவுள்ளார்
இந்தப் பயணம் குறித்து பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்து இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து நேற்று விளக்கமளித்தார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, பௌத்த மதத்தின் மீது இந்திய பிரதமர் பெரும் மதிப்பை வைத்திருப்பதாகவும், அவர் சிறிலங்கா வரும் போது கண்டிக்குப் பயணம் மேற்கொள்வார் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.
அத்துடன், “இந்தியாவிடம் இருந்து சிறிலங்காவுக்குக் கிடைத்த பரிசு தான் பௌத்தம். இந்தியாவும் சிறிலங்காவும் மிக நெருங்கிய அயலவர்கள், சகோதரர்கள், ஒரே குடும்பத்தினர்.” என்றும் இந்தியத் தூதுவர் குறிப்பிட்டார்.
இந்தியத் தூதுவருடனான சந்திப்பின் போது, புத்தகாய தொடர்பாக சில கரிசனைகளை மகாநாயக்கர்கள் எழுப்பியிருந்தனர், அவை தொடர்பாக தாம் அறியவில்லை என்று இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார்.