நாடு திரும்புகிறார் சம்பந்தன் – 27 நாள் வெளியாகிறது கூட்டமைப்பின் நிலைப்பாடு
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வரும் 27ம் நாள் வெளியிடப்படும் என்று, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
“இரண்டு பிரதான வேட்பாளர்களினதும், தேர்தல் அறிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த வாரம் நாடு திரும்பிய பின்னர், எமது முடிவு எடுக்கப்படும்.
எமது கட்சியினருடன், நாம் வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் ஆலோசனைகளை நடத்தியிருக்கிறோம்.
எனினும், இரா.சம்பந்தன் நாடு திரும்பிய பின்னரே எமது முடிவு வெளியிடப்படும்.
அவர் மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதற்காக கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவில் தங்கியுள்ளார்” என்றும், மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.