பிரகீத் கடத்தல் வழக்கின் பிரதான சந்தேக நபர்களான புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இருவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் பிரதான சந்தேக நபரும் முதலாவது எதிரியுமான லெப்.கேணல் சம்மி அர்ஜுன குமாரரத்ன, மூன்றாவது எதிரியான நாதன் எனப்படும், ஸ்ராவ் சார்ஜன்ட் ராஜபக்ச முதியான்சலாகே பிரியந்த குமார ராஜபக்ச ஆகியோரையே அவிசாவளை மேல் நீதிமன்றம் நேற்று பிணையில் விடுவித்தது.
இந்த வழக்கில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 9 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று இருவருக்குப் பிணை வழங்கப்பட்டது.
மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சார்ஜன்ட் மேஜர் வதுகெதர வின்னி பிரியந்த டிலஞ்சன் உபசேன மற்றும் கோப்ரல் செனிவிரத்ன முதியான்சலாகே ரவீந்திர ரூபசேன ஆகியோரின் பிணை மனுக்கள் வரும் நொவம்பர் 8ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர்களின் கடவுச்சீட்டுகளை முடக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.