திருச்சி வழியாக கொழும்பு திரும்பும் சிறிலங்கா அதிபர் – விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்ரெக் மாநாடுகளில் பங்கேற்பதற்காக இந்தியாவின் கோவா மாநிலத்துக்குச் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று திருச்சி வழியாக கொழும்பு திரும்பவுள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது வெளிநாட்டுப் பயணங்களை பயணிகள் விமானங்களிலேயே மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சனிக்கிழமை இரவு சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலம், பெங்களூர் சென்று அங்கிருந்து எயர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் கோவா சென்றிருந்தார்.
பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு சிறிலங்கா அதிபர் இன்று நாடு திரும்பவுள்ளார்.
சிறப்பு விமானம் மூலம் கோவாவில் இருந்து இன்று பிற்பகல் 1 மணியளவில் அவர் திருச்சி விமான நிலையத்தை சென்றடைவார்.
அங்கிருந்து இன்று பிற்பகல் 3.30 மணியளவில் புறப்படும் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலம், கொழும்பு திரும்பவுள்ளார்.
சுமார் இரண்டு இரண்டரை மணிநேரம் அவர் திருச்சி விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் அறையில் தங்கியிருப்பார்.
சிறிலங்கா அதிபரின் வருகையை முன்னிட்டு, திருச்சி விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விமான நிலையத்துக்குள் வரும் பயணிகள் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்படுவதுடன், வாகனங்களும், இரண்டு கட்டங்களாக சோதனையிடப்படுகின்றன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர் திருப்பதிக்கு இரண்டு தடவைகள் வந்து சென்ற போதும், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்திருந்தார்.
முதல் முறையாக அவர் தமிழ்நாட்டில் உள்ள திருச்சி விமான நிலையம் வழியாக கொழும்பு திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.