வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள் – சென்னை விமான நிலைய காட்சிகள்
சென்னையில் கொட்டிவரும் பெருமழையால், ஏற்பட்டுள்ள வெள்ளத்தை அடுத்து சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் விமானங்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன.
சென்னை விமான நிலையத்தை அண்டியுள்ள தாம்பரம் பகுதியில், நேற்றுமுன்தினம் காலை தொடக்கம் நேற்றுக்காலை 8 மணி வரையான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 490 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது.
இந்த மழையினாலும், ஏரிகள் உடைப்பெடுத்து வந்த நீரினாலும், சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு சென்னை விமான நிலையத்தின் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டு விமான நிலையம் முற்றாகவே மூடப்பட்டது.
அதேவேளை, இந்த பெரு வெள்ளத்தின் பாதிப்புக்கு விமானங்களும் தப்பிக்கவில்லை.
ஓடுபாதைகளுக்கு அருகேயும், தரிப்பிடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ள பெரிய விமானங்கள் வெள்ளத்தின் நடுவே சிக்கிப்போயுள்ளன.
அதேவேளை பல சிறிய விமானங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இன்னும் சில விமானங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, விமான நிலைய சுற்று வேலிப்பகுதிக்கு இழுத்தச் செல்லப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையம் வரும் 6ஆம் நாள் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அவசர நிவாரணப் பணி உள்ளிட்ட அத்தியாவசிய பயணிகள் போக்குவரத்துக்காக அரக்கோணம் கடற்படை விமான நிலையத்தை தற்காலிக பயணிகள் விமான நிலையமாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.