வேறு நாடுகளின் கடற்படைத் தளங்களுக்கு சிறிலங்காவில் இடமில்லை – சிறிலங்கா பிரதமர்
சிறிலங்காவில் ஏனைய நாடுகளின் கடற்படைத் தளங்கள் அமைக்க இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இன்று ஆரம்பமான, சிறிலங்கா கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“வரலாற்று ரீதியாக, வங்காள விரிகுடாவில் சிறிலங்கா எப்போதும், முக்கியத்துவமான நலன்களைக் கொண்டிருக்கிறது.
சிறிலங்காவின் பொருளாதார வலயத்துக்குள், அனைத்துலக தீவிரவாதம், நாடுகடந்த குற்றங்கள், ஆட்கடத்தல்களைத் தடுக்க அர்ப்பணிப்புடன் உள்ளது.
சிறிலங்காவின் பாதுகாப்புக்கு இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு முக்கியமானது.
சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படையின் ஆற்றல்களை ஒருங்கிணைப்பதற்கான சாத்தியங்களை சிறிலங்கா ஆய்வு செய்து வருகிறது.
வணிக கப்பல்களுக்கு சிறிலங்காவில் உள்ள எல்லா துறைமுகங்களையும் திறந்திருப்பதை சிறிலங்கா அரசாங்கம் உறுதி செய்யும்.
ஆனால் சிறிலங்காவுக்குள் ஏனைய நாடுகளுக்கு கடற்படைத் தளங்களை அமைக்க இடமளிக்கப்படாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.